மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு கொரானா தொற்று

தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. பிரச்சாரம், வேட்பு மனுத் தாக்கல், பொது மக்களைச் சந்தித்தல் என அரசியல் கட்சியினர் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். இதனால் பொது இடங்களில் மக்கள் அதிகளவு கூடும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்திலும் கொரானா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு மீண்டும் ஆயிரத்தை நெருங்கியிருக்கிறது. நேற்று மட்டும் 989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 394 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.

இதுபோன்ற சூழலில் தமிழகத்தில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. வேட்பாளர்கள் வீடு வீடாக, வீதி வீதியாகச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், வேளச்சேரி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக வேளச்சேரி தொகுதியில் விருப்ப ஓய்வு பெற்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு போட்டியிட நேற்று முன்தினம் வேட்புமனுத் தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதை வேளச்சேரி வாக்காளர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் உங்கள் அனைவரையும் சந்தித்து உங்கள் ஆசீர்வாதங்களையும் வாக்குகளையும் பெற ஆசைப்படுகிறேன். ஆனால் கொரோனா பாதிப்பால் தற்போது, டிஜிட்டல் முறையில் பிரச்சாரத்தில் தொடர்ந்து ஈடுபடுவேன். எங்களது கட்சி உறுப்பினர்கள் உங்களைச் சந்திப்பார்கள். எனக்கும், மக்கள் நீதி மய்யத்திற்கும் வாக்களியுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்

Related posts

Leave a Comment